பிச்சை ஆண்டவர் கோவிலில் காய்கறி திருவிழா


பிச்சை ஆண்டவர் கோவிலில் காய்கறி திருவிழா
x

அன்னவாசல் அருகே பிச்சை ஆண்டவர் கோவிலில் காய்கறி திருவிழா நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

பிச்சை ஆண்டவர் கோவில்

அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலை கிராமம் உள்ளது. இங்கு மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் எனும் ஒரு மதத்தினர் உள்ளனர். இவர்கள் தங்கள் பெயருக்கு முன்பாக சாலை என சேர்த்துக்கொள்வார்கள். இந்த மெய்வழி மதத்தில் 69 சாதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை, தை பொங்கல் விழா மற்றும் புரட்டாசி மாதம் காய்கறி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி மெய்வழி தலையுக ஆண்டு புரட்டாசி மாதம், பிச்சை ஆண்டவர் கோவிலில் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்து காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு வரிசையாக நின்றனர்.

பிரசாதம்

அப்போது, மெய்வழி சபைக்கரசர் சாலை வர்க்கவான் வந்து அனைவரிடமும் காய்கறிகள், அரிசி, பருப்புகளை பெற்றுக்கொண்டு ஆசீர்வாதம் வழங்கினார். பின்னர் அனைவரிடம் பெறப்பட்ட காய்கறிகள், அரிசி, பருப்பை சமையல் செய்து, அனைவருக்கும் சபைக்கரசர், பிரசாதமாக வழங்கினார். அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

இவ்விழாவில், தமிழகம் மற்றும் வெளிமாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு காய்கறிகளை படைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.


Next Story