சாலையில் நீண்டநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் போர்க்கால அடிப்படையில் பறிமுதல் செய்யப்படும் - மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன்


சாலையில் நீண்டநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் போர்க்கால அடிப்படையில் பறிமுதல் செய்யப்படும் - மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன்
x

பயன்பாடின்றி சாலையில் நீண்டநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் போர்க்கால அடிப்படையில் பறிமுதல் செய்யப்படும் என கூறினார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் 'நடவடிக்கையில் இறங்கு' திட்டத்தின் கீழ் சென்னை கிருஷ்ணாம்பேட்டை வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள மயான பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரத் தூய்மைப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில், சாலையோர கடைகள் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகள், கட்டிடக் கழிவுகள் மற்றும் நீண்டநாட்களாக பயன்பாடு இன்றி கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றி அந்த பகுதியை தூய்மையாக வைத்திடுமாறு பொதுமக்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களிடம் கமிஷனர் அறிவுறுத்தினார்.

பின்னர், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. 358 மாடுகள் பிடிக்கப்பட்டாலும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் அதிகமாக காணப்படுகிறது. வருங்காலத்தில் இதற்கான அபராத தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போன்று, 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இன்றி நிறுத்தப்பட்ட ஆயிரத்து 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் இத்தகைய வாகனங்கள் போர்க்கால அடிப்படையில் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

'நடவடிக்கையில் இறங்கு' திட்டத்தின் மூலம் மயானங்களை சுத்தப்படுத்தும் பணியானது கிருஷ்ணாம்பேட்டை உள்ளிட்ட 17 மயானங்களில் நடைபெறுகிறது. சென்னையில் 42 மயானங்கள் உள்ளன. தொடர்ந்து மயானங்கள் சுத்தம் செய்யப்படும் பணிகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story