குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம்விடப்படுமா?


குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம்விடப்படுமா?
x

வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம்விடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு உள்ளனர்.

நாமக்கல்

தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.

புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையில் அவை கிடக்கும். செடி கொடிகள் சுற்றிலும் முளைத்து நிற்பதுடன் விஷப் பூச்சிகளும் உள்ளே குடியிருக்க ஏதுவாக இருக்கும்.

கவலை இல்லை

இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம் வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.

அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போவார்கள். அவைகளை பைசல் செய்து யாருக்காவது பயன்படச் செய்யலாம் அல்லவா?. இப்படித்தான் அனைவருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.

வாகனங்கள் ஏலம்

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே காண்போம்.

பொது ஏலம் விடப்படும்

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன்:-

சாலையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் மற்றும் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்படுகின்றன. இதில் வழக்கு தொடர்புடைய வாகனங்கள் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றன. ஏனைய வாகனங்களை மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் ஏலம் விடப்படுகிறது.

மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கப்படும். அந்த அபராத தொகையை கட்ட காலஅவகாசமும் கொடுக்கப்படும். அவ்வாறு கட்டி விட்டால் உடனடியாக வாகனம் விடுவிக்கப்படும். இல்லை எனில் பொது ஏலத்திற்கு விட்டுவிடுவோம். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வழக்கு தொடர்பான வாகனங்களை கணக்கெடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அவை வழக்குக்கு அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே நிறுத்தி வைக்கப்படும். இல்லை எனில் சட்ட விதிகளின் படி உரிமையாளரிடம் ஒப்படைக்கவோ, இல்லை எனில் பொதுஏலம் விடவோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஏலம் விடப்படும். அந்த வகையில் தற்போது 13 வாகனங்கள் ஏலத்திற்கு தயார் நிலையில் உள்ளன.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும்

எருமப்பட்டி சமூக ஆர்வலர் கிருபாகரன்:-

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே சுற்றுச்சூழல் கேடுக்கு காரணமாக இருந்து வருகின்றன. இதற்கு வாகனங்களின் ஆயுள் காலத்துக்கு பிறகு அவற்றை முறைப்படி அழிக்கும் தொழில்நுட்பம் உரிய வகையில் செயல்படுத்தப்படாமல் இருப்பதே காரணம் ஆகும். இதுபோன்ற வாகனங்களை சேகரிப்பது, அவற்றின் பாகங்களை பிரித்து உரிய வகையில் அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தான் இவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும்.

போலீசாரால் வழக்குகள் தொடர்பாக பிடிக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் செலுத்த ஒரு குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்கி, உடனடியாக செலுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல அறிவுறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஏலம் விட்டு அரசுக்கு வருவாயை பெருக்கலாம். உடனடியாக ஏலம் விடும்போது அவை கூடுதல் விலைக்கு போகும். யாருக்காவது ஓட்டுவதற்கு பயன்படும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஏலம் விடுவதாக இருந்தால் அவற்றை இரும்பு எடைக்குத்தான் கேட்பார்கள். இதனால் யாருக்கும் லாபம் இல்லை.

அரசுக்கு வருவாய் கிடைக்கும்

திருச்செங்கோட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் இளங்கோவன்:-

பழைய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பழைய கார், ஜீப் போன்ற வாகனங்களை சேர்த்து வைப்பதற்கு பதிலாக மொத்த வியாபாரிகளிடம் ஏலத்திற்கு விடலாம். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கும், அரசு அலுவலகங்களும் சுத்தமாக இருக்கும். இதுபோன்ற வாகனங்களை விற்பனை செய்வதால் அதிக தொகை கொடுத்து புதிய வாகனங்களை வாங்க முடியாதவர்கள் இதனை வாங்கி பயனடைவார்கள். ஆண்டு கணக்கில் பழுதாகி கிடக்கும் வாகனங்களை உரிய வகையில் அழிப்பதன் மூலம் அதில் உள்ள இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் போன்றவற்றை மீட்டெடுக்க முடியும்.

நமது வீட்டில் வைத்திருக்கும் ஓரிரு வாகனங்களை கூட நம்மால் தினசரி துடைத்து பராமரிக்க முடியவில்லை. அவ்வாறு இருக்க வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பராமரிப்பது கஷ்டமான விஷயம் தான். எனவே இதுபோன்ற வாகனங்களை குறித்த காலத்தில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும்.

மண்வளம் பாதிப்பு

நாமக்கல் சேர்ந்த வக்கீல் பிரேம்குமார்:-

விபத்தில் சிக்கி சாலையோரம் கிடக்கும் வாகனங்கள் பலவற்றில் பேட்டரிகள் அப்படியே இருக்கின்றன. இந்த பேட்டரியில் திராவக கசிவு ஏற்படுவதாலும், டயரில் காற்று இறங்கி மண்ணில் புதைவதாலும் மண் வளம் பாதிக்கப்படுவதோடு, நீர்வளமும் கெடுகிறது. வாகனங்களின் பெயிண்டு கரைவது, துருப்பிடிப்பது போன்றவையும் மண்ணில் சேர்வதால் மண் வளம் சீர்கெடுகிறது.

2030-ம் ஆண்டுக்குள் பேட்டரி வாகனங்களை பெருமளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. அதற்கு முன்பாக இதுபோன்ற கைவிடப்பட்ட வாகனங்களை உரிய வகையில் அழித்தாலே பெருமளவு மண்வளமும், நீர் ஆதாரமும் காக்கப்படும். வாகனத்தின் என்ஜின் எண் மற்றும் 'சேசிஸ்' எண்களைக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலர் உதவியுடன் உரிமையாளர்களை கண்டறிந்து கோர்ட்டு உத்தரவுடன் உரியவர்களிடம் சேர்க்க போலீசார் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

1 More update

Next Story