சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் அல்ல - தமிழக அரசு விளக்கம்


சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் அல்ல - தமிழக அரசு விளக்கம்
x

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் அல்ல என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). இவர் கடந்த 11-ம் தேதி பிற்பகலில் சென்னை ஐகோர்ட்டு, வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவுவாயில் முன்பு வந்தார். அப்போது திடீரென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் தீப்பிடித்து எரிந்தது. உடல் எரிந்த நிலையில் ஐகோர்ட்டு உள்ளே நடந்து சென்றார். தொடர்ந்து உடலில் பெட்ரோல் ஊற்றியபடி சென்றதால், தீ வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்த போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை.

இலவச சட்ட ஆலோசனை மையம் அருகில் வந்தவுடன் தீயணைக்கும் எந்திரம் மூலம், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் போர்வையை அவர் மீது போர்த்தினார்கள். இந்த தகவல் அறிந்ததும் வக்கீல்களும், வழக்கு விசாரணைக்கு வந்த பொதுமக்களும் அங்கு கூட்டமாக திரண்டு விட்டனர்.

அந்த பதற்றமான சூழ்நிலையிலும், தீக்குளித்த வேல்முருகன், அங்கு கூடிநின்றவர்கள் மத்தியில் சத்தம் போட்டு பேசினார். அப்போது அவர், 'நான் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவன். எனது மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து பார்த்தேன். ஆனால் சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. அந்த வருத்தத்தில் இந்த முடிவை எடுத்தேன். எனது இந்த முடிவின் மூலம், இனிமேல் பொதுமக்களுக்கு உடனுக்குடன் சாதிச்சான்றிதழ் கிடைக்கும் என்று நம்புகிறேன்' இவ்வாறு அவர் சத்தம் போட்டு பேசினார்.

பின்னர், அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கரிஞர், நீதிமன்ற வளாகத்தல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியினத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் பட்டியல் இனத்தவர் என்பதால் பழங்குடியினர் சான்று கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து, சாதி சான்று வழங்கவில்லை என தீக்குளித்த வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story