நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்


நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 12 April 2023 6:45 PM GMT (Updated: 12 April 2023 6:45 PM GMT)

நிதிநிறுவனத்தில் தீபாவளி சீட்டு சேர்ந்து பணத்தை இழந்தவர்கள் திருவண்ணாமலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

நிதிநிறுவனத்தில் தீபாவளி சீட்டு சேர்ந்து பணத்தை இழந்தவர்கள் திருவண்ணாமலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிதி நிறுவனம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமை இடமாகக் கொண்ட தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்யாறு, ஆரணி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை தொடங்கி பொதுமக்களிடம் ரூ.500 முதல் ரூ.25 ஆயிரம் வரை பல்வேறு குழுக்களாக பிரித்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர்.

சுமார் 2 ஆண்டு காலம் நடத்தி வந்த நிலையில் இதனை விரிவுபடுத்தி மளிகை பொருள், பட்டாசு, தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை வகையில் வழங்கும் சீட்டுகளையும் நடத்தி வந்தனர்.

அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகளை நியமனம் செய்து கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனை நம்பி ஒவ்வொரு ஏஜெண்டும் தலா 200 முதல் 2ஆயிரம் உறுப்பினர்களை சீட்டு நிறுவனத்தில் இணைத்து உள்ளனர்.

தலைமறைவு

இதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டு அந்த நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்கள் தலைமறைவாகினர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யாறு போலீஸ் நிலையம், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என பல்வேறு இடங்களில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்புடைய சீனிவாசன் என்பவரை கைது செய்தனர்.

ஆனால் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் காஞ்சி சாலை அருகே திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.

போராட்டம்

அங்கு அவர்கள் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் ஒவ்வொருவரும் தாங்கள் இழந்த தொகை எவ்வளவு, ஏஜெண்டுகள் தாங்கள் சேர்த்தவர்கள், அவர்கள் இழந்த பணம் குறித்து ஆதாரங்களுடன் தனித்தனியாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த மனுக்களை போலீசார் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story