கிராம நிர்வாக அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது


கிராம நிர்வாக அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது
x

வேலூரில் பெய்த பலத்த மழையால் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மாநகராட்சி கமிஷனர்ஆய்வுசெய்தார்.

வேலூர்

வேலூரில் பெய்த பலத்த மழையால் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மாநகராட்சி கமிஷனர்ஆய்வுசெய்தார்.

பலத்த மழை

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 3 மணி அளவில் பலத்த மழை கொட்டியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாது பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக நகரின் சில பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாசாலையில் தண்ணீர் தேங்கியது. மக்கானில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

கிராம நிர்வாக அலுவலகம்

இதேபோல சைதாப்பேட்டை மெயின் பஜாரில் உள்ள வட வேலூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள்ளேயும் தண்ணீர் புகுந்தது. கால்வாயில் குப்பை அடைப்பு ஏற்பட்டதாலும், அந்த பகுதியில் சாலை உயர்வாக அமைக்கப்பட்டதாலும் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் சிரமமடைந்தனர்.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

கமிஷனர் ஆய்வு

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மழைநீர் தேங்கிய அம்பேத்கர்நகர் நகர்ப்புற சுகாதார நிலையம், கன்சால்பேட்டை, சேண்பாக்கம், சாய்நாதபுரம், புதிய பஸ்நிலையம், கிரீன்சர்க்கிள், டபுள்ரோடு, சுண்ணாம்புக்கார தெரு, மெயின்பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் கால்வாயில் செல்வதற்கு தடையாக காணப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தும்படி தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது வேலூர் மாநகர நல அலுவலர் முருகன் (பொறுப்பு), சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story