அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொள்வது அவசியம்- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்


அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொள்வது அவசியம்- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்
x
தினத்தந்தி 2 Oct 2022 7:00 PM GMT (Updated: 2 Oct 2022 7:01 PM GMT)

அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொள்வது அவசியமாகும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்

அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக அறிந்து கொள்வது அவசியமாகும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

கிராமசபை கூட்டம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டாரத்துக்கு உட்பட்ட மேலத்திருப்பாலக்குடி ஊராட்சியில் காந்தி பிறந்த நாளையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வளர்ச்சி

கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும். கிராம சபை கூட்டங்களில் வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மகளிர் திட்டம், மீன்வளத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிப்பார்கள். பொதுமக்கள் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக அறிந்து கொள்வது அவசியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தின்போது வேளாண்மைத்துறை சார்பில் 2 பேருக்கு தார்ப்பாய், இடுபொருட்கள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

முன்னதாக கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்டவை தொடர்பான 24 தீர்மானங்கள் பொதுமக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஸ்ரீலேகா வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ரவீந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பொன்னியின்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஷோபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பக்கிரிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story