நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x

கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கினர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். சிவந்திபட்டி அம்பேத்கர் தெரு பொதுமக்கள், தங்கள் ஊரில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீர் ஓடையை முழுமையாக கட்டி தர வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

நெல்லை அருகே தாதனூத்து கிராம மக்கள், நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டரிடம் மனு வழங்கினர். அதில், ''தாதனூத்து கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குவாரி உரிமம் பெற்ற ஒருவர் அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக வெடிமருந்து பயன்படுத்தி அதிக ஒலி சத்தத்துடன் வெடி போடுகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கிராமத்தை சுற்றி 3 கிலோமீட்டர் அளவுக்கு புதிதாக எந்த குவாரிக்கும் உரிமம் வழங்க கூடாது'' என்று கூறியிருந்தனர்.

தீபாவளி போனஸ்

தமிழ்நாடு எச்.எம்.எஸ். கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் பேரவை மாவட்ட நலவாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் பாக்கியம் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ''கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கு எளிய முறையில் மானியம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், ''மானூரில் பொது கட்டிடங்கள் அமைக்க இடம் கேட்கும்போது யூனியன் அதிகாரிகள் இங்கு பொதுவான இடம் இல்லை என்று கூறி சான்று வழங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட தீயணைப்பு நிலையம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவை கட்ட முடியாத நிலை இருக்கிறது. எனவே இப்பகுதியில் அரசு கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

சாலை அமைக்க கோரிக்கை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தலைமையில் கொடுத்த மனுவில், ''மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட மணிமுத்தாறு அருவியின் மேல் தலையணையில் இருந்து மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து வரையிலும் தார் சாலை மிகவும் மோசமாகவும், பயணிப்பவருக்கு ஆபத்தான நிலையிலும் உள்ளது. அங்கு உடனே தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.

நெல்லை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு போதிய வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கங்கை கொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலங்களை நல்ல முறையில் செயல்படுத்தி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை டவுனில் சந்தியா கொலைக்கு நீதி வேண்டும் என்று தமிழர் விடுதலை களம் மத்திய மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.


Next Story