நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x

ராதாபுரம் அருகே கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

ராதாபுரம் அருகே கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மக்களை வாங்கினார்.

ராதாபுரம் அருகே இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், ராதாபுரம் தாலுகா செயலாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில், "இருக்கன்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நிலங்களில் நெல் பயிர், வாழை, பிச்சி, மல்லி பூக்கள் என பல்வேறு விதமான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இருக்கன்துறை அருகே புத்தேரி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு அருகில் 2 புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு அதிவேகத்தில் வேலை நடந்து வருகிறது. இந்த கல்குவாரி செயல்பட்டால் விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்படும். எனவே கல்குவாரி தொடங்குவதற்கு கொடுத்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

சுகாதார சீர்கேடு

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அதில், ராமையன்பட்டி குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை மறுசுழற்சி செய்து சேமித்து வைக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்கள் இயக்கத்தின் மூலம் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறியுள்ளனர்.

நெல்லை சந்திப்பில் அம்பேத்கர் சிலையை சுற்றியுள்ள சுகாதார சீர்கேடுகளை சரிசெய்து அங்கு ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கி ஆக்கிரமிப்புகளை அகற்றி பூங்கா அமைத்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், திராவிட தமிழர் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் உரிமை மீட்புகளம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு முஸ்லிம் லீக், பூர்வீக தமிழர் கட்சி, தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை, புரட்சி பாரதம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலெக்டர் மனு கொடுத்தனர்.

உண்ணாவிரத போராட்டம்

கூடங்குளத்தில் குடிநீர் பிரச்சினை, சுகாதார பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையென்றால் வருகிற 8-ந் தேதி கூடங்குளம் கீழ பஜாரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

மேலசெவலில் பழுதடைந்த நிலையில் உள்ள மண்பாண்ட தொழிற்கூடத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.


Next Story