கிராம மக்கள் திடீர் சாலை மறியல்


கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
x

சோளிங்கா் அருகே ராமாபுரம்-குப்புக்கல்மேடு சாலை ஆக்ரமிப்பை அகற்றி விரிவாக்கம் செய்யக்கோரி கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

சோளிங்கா் அருகே ராமாபுரம்-குப்புக்கல்மேடு சாலை ஆக்ரமிப்பை அகற்றி விரிவாக்கம் செய்யக்கோரி கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை பழுது

சோளிங்கரை அடுத்த ராமாபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். அந்தச் சாலை தற்போது பழுதடைந்துள்ளது. மழைக் காலத்தில் குப்புக்கல்மேடு பகுதியில் இருந்து ராமபுரத்துக்கு செல்ல மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அந்தச் சாலையில் ஆக்கிரமிப்புகளும், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்களும் உள்ளன. நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு செல்ல ஆம்புலன்ஸ், விவசாயப் பணிகளுக்காக நெல் அறுவடை எந்திரம் வந்து செல்ல சிரமமாக உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட லாயக்கன்ற சாலையாக உள்ளது.

அளவீடு செய்யும் பணி

இந்தச் சாலையோரம் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி சலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கடந்த மாதம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 30-ந்தேதி போலீஸ் பாதுகாப்போடு சாலையை விரிவாக்கம் செய்ய அளவீடு செய்யும் பணி நடந்தது. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிகாரிகளுக்கு கண்டனம்

இதற்கிடையே, ராமாபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ேடார் சோளிங்கர்-லாலாபேட்டை சாலையில் குப்புக்கல்மேடு பஸ் நிறுத்தம் அருகில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், ராமாபுரம்-குப்புக்கல்மேடு சாலையை சீர் செய்ய வேண்டும், சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, விரிவாக்கம் செய்ய ேவண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். சாலை மறியலால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேச்சு வார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்ெபக்டர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், ஒன்றியக்குழு உறுப்பினா் முனியம்மாள் பிச்சாண்டி, கிராம நிர்வாக அலுவலர் ஷானு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் ராமாபுரம்-குப்புக்கல்மேடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்யப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story