கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:46 PM GMT)

சீர்காழி அருகே மின்சாரம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:-

சீர்காழி அருகே மின்சாரம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கனமழையால் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 11-ந் தேதி இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் தடைபட்டது.மின் கம்பங்களை சீரமைத்து மின் வினியோகம் வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான கிராமங்களில் மழைநீர் வடியவில்லை. சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை காரணமாக குடியிருப்புகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

சாலை மறியல்

இந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக மின் வினியோகம் இல்லை. இதனால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.கடந்த 3 நாட்களாக மின் சாரம் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டித்தும், உடனடியாக மின் வினியோகம் வழங்கக்கோரியும் திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமுல்லைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே திருமுல்லைவாசல் -சீர்காழி சாலையில் இந்த சாலை மறியல் அரை மணிநேரம் நடந்தது.போராட்டத்தின்போது கிராம மக்கள் மரக்கிளைகளை சாலையின் குறுக்கே போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story