புதுப்பேட்டை அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


புதுப்பேட்டை அருகே    இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்    போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2022 6:45 PM GMT (Updated: 30 Nov 2022 6:46 PM GMT)

புதுப்பேட்டை அருகே இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர்

புதுப்பேட்டை,

இலவச வீட்டுமனை பட்டா

புதுப்பேட்டை அருகே அங்குசெட்டிபாளையம் புதுநகர் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக 120 குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கடந்த வாரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வருவாய்த்துறையினர் பொதுமக்கள் வசிக்கும் இடத்தை நவம்பர் 30-ந்தேதி பார்வையிட்டு அளவீடு செய்து மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தனர்.

அதன்படி 30-ந்தேதியான நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் புதுநகர் பகுதிக்கு வர தாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பண்ருட்டி -சேலம் மெயின் ரோட்டில் திடீரென சாலையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சரண்யா, கனகராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story