தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரிகாலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்சிதம்பரம் அருகே பரபரப்பு


தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரிகாலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்சிதம்பரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:47 PM GMT)

சிதம்பரம் அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

அண்ணாமலைநகர்,

குடிநீர் வினியோகம் இல்லை

சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் உள்ள அபிராமி அம்மன் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட தெருக்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்தும், தடையின்றி குடிநீர் வழங்கக்கோரியும் நேற்று காலை கிராம மக்கள் காலி குடங்களுடன் அப்பகுதியில் உள்ள கிள்ளை-சிதம்பரம் சாலைக்கு திரண்டு வந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், தினசரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிதம்பரம்-கிள்ளை சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story