கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2023 6:45 PM GMT (Updated: 15 Feb 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை பஞ்சாயத்து, அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அம்மன் கோவில்பட்டியில் உள்ள வைப்பாற்றில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தொடர்ந்து அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணனிடம் மனு கொடுத்தனர். அதில், "விளாத்திகுளம் தாலுகா ஆற்றங்கரை பஞ்சாயத்து வைப்பாற்று கரையையொட்டி அம்மன் கோவில்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பாசனம் மற்றும் மானாவாரி விவசாயங்கள் நடந்து வருகின்றன.

கடந்த காலங்களில் ஆற்றின் வடபுறமுள்ள ஆற்றங்கரை கிராமத்தில் மணல் குவாரி அமைக்கப்பட்டது. இதனால் விவசாய கிணறுகள், குடிநீர் கிணறுகள் தண்ணீரின்றி வறண்டன. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏற்கெனவே இந்தாண்டு சராசரி மழையை விட குறைவாக மழை பெய்துள்ளதால் கோடை தொடங்கும் முன்பே பெரும்பாலான கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு அம்மன் கோவில்பட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்


Next Story