செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 July 2023 7:15 PM GMT (Updated: 9 July 2023 7:15 PM GMT)

கோத்தகிரி அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஜான் சல்லிவன் நினைவகம் மற்றும் ஜான் சல்லிவன் நினைவு சூழல் பூங்கா, கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்தநிலையில் அங்குள்ள ஒருவரது நிலத்தில் தனியார் செல்போன் நிறுவனம், நிலத்தின் உரிமையாளருடன் செல்போன் கோபுரம் அமைக்க ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று தனியார் செல்போன் நிறுவன பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கினர். இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். மேலும் பணிகளை நிறுத்த வலியுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். பின்னர் பணிகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சமாதானமடைந்த கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தனியார் செல்போன் நிறுவன அலுவலர்கள், நிலத்தின் உரிமையாளர் மற்றும் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story