நகைக்கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து கிராம மக்கள் மறியல்


நகைக்கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து கிராம மக்கள் மறியல்
x

நகைக்கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தில் இயங்கி வரும் கூட்டுறவு கடன் சங்கத்தில் 4,463 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நகைகளை அடகு வைத்து நகைக்கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவு வங்கி தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நகைகளை அடகு வைத்தவர்கள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் வங்கி நிர்வாகம் 615 பேர்தான் நகைக்கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்கள் என்று அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த மற்றவர்கள், வங்கியில் நகை அடகு வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கொடுக்கூர் பஸ் நிறுத்தம் அருகில் வேல்முருகன் என்பவரின் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த குவாகம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகளை புகார் மனுவாக எழுதி கொடுக்க கூறினார். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story