கிராம மக்கள் 'திடீர்' ஆர்ப்பாட்டம்


கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
x

விக்கிரமசிங்கபுரம் அருகே நன்மைக்கூடம் அமைக்க அதிகாரிகள் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே நன்மைக்கூடம் அமைக்க அதிகாரிகள் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்மைக்கூடம்

விக்கிரமசிங்கபுரம் அருகே மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிமேடு கிராமம் உள்ளது. இக்கிராமம் மற்றும் இதன் அருகில் உள்ள மேல ஏர்மாள்புரத்தை சேர்ந்த ஒருபிரிவினர் செட்டிமேட்டில் உள்ள ஒரு இடத்தை காலம் காலமாக இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் நன்மைக்கூடம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று அவர், நன்மைக்கூடமும், மணிமுத்தாறு பேரூராட்சியில் இருந்து சின்டெக்ஸ் தொட்டி அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து அந்த பகுதியில் பெரும்பாலான பணிகள் நடந்து முடிந்துவிட்டது.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் அம்பை வருவாய் துறையினர் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று இது அரசு புறம்போக்கு இடம். இதனால் அங்கு நடக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையாக அனுமதி பெற்ற பின்னர் பணியை தொடங்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சிவா, மணிமுத்தாறு நகர அ.தி.மு.க. செயலாளர் ராமையா மற்றும் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் நன்மைக்கூடம் அமைக்கும் இடத்தில் திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story