வேன் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்: சாலையை தரம் உயர்த்தக்கோரி கிராம மக்கள் மறியல் விருத்தாசலம் அருகே பரபரப்பு


வேன் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்:  சாலையை தரம் உயர்த்தக்கோரி கிராம மக்கள் மறியல்  விருத்தாசலம் அருகே பரபரப்பு
x

விருத்தாசலம் அருகே வேன் கவிழ்ந்து 8 பேர் படுகாயமடைந்தனர். சாலையை தரம் உயர்த்தக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

வேன் கவிழ்ந்து விபத்து

விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கருக்கை கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு வேனில் புறப்பட்டனர். அந்த வேன் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமம் அருகே வேன் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கம்மாபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 65), சுப்பிரமணியம் (62), வேல்முருகன் (38), பழனியம்மாள் (65), ராஜேஸ்வரி (60) உள்ளிட்ட 8 பேர் படுகாய மடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சாலை மறியல்

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த கார்குடல் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இங்கு அடிக்கடி விபத்து நடைபெற்று வருவதால், சாலையை உடனடியாக தரம் உயர்த்தக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானம் செய்து, அங்கிருந்து கலைந்து போக செய்தனா். இந்த விபத்து காரணமாக கம்மாபுரம்- விருத்தாசலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story