மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வினோத வழிபாடு


மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வினோத வழிபாடு
x

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அன்று பவுர்ணமி நாளில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நிலா பெண்ணை தேர்வு செய்யும் சடங்குகளை கடந்த 30-ந்தேதி கிராம மக்கள் தொடங்கினர். இதற்காக ஊரில் உள்ள 10 வயதுக்கு உட்பட்ட 15 சிறுமிகள் மாசடச்சி அம்மன் கோவிலுக்கு 7 நாட்கள் தங்கள் வீடுகளில் இருந்து பலவகை சாதம் தயார் செய்து கொண்டு வந்தனர். ஒவ்வொரு நாள் இரவும் அந்த சாதத்தை ஒன்றாக சேர்த்து அதன் ஒரு பகுதியை கோவிலில் படைத்து விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

நிலா பெண் தேர்வு

அந்த வழிபாட்டில் நேற்று முன்தினம் இரவு 8 மணியில் இருந்து கோவிலில் தூங்காமல் விழித்திருக்கும் சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தூங்காமல் இருந்த அந்த கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்-மேகலா தம்பதியின் மகள் சர்வஅதிஷ்டா (வயது 10) என்ற சிறுமி நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டாள். அந்த சிறுமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட சிறுமி சர்வஅதிஷ்டாவை கிராம பெண்கள் ஊர் எல்லையில் உள்ள சரளி மலைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆவாரம் பூக்களை பறித்து மாலையாக தொடுத்து நிலா பெண்ணான சிறுமிக்கு அணிவித்து அலங்கரித்தனர்.

வரவேற்பு

பின்னர் ஒரு கூடையில் ஆவாரம் பூக்களை வைத்து அதனை சிறுமியின் தலையில் வைத்தனர். பின்னர் சிறுமியை கிராமத்துக்கு அழைத்து வந்தனர். ஊர் மக்கள் சார்பில் தாரை தப்பட்டை முழங்க நிலா பெண்ணுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று அமர வைத்தனர். அங்கு கும்மியடித்து ஆண்கள், பெண்கள் பாட்டு பாடி சிறுமியை சுற்றி வந்தனர்.

பின்னர் மாசடச்சி அம்மன் கோவிலுக்கு சிறுமியை அழைத்து வந்தனர். அங்கு சிறுமியின் முறை மாமன்கள் சேர்ந்து பச்சை தென்னை ஓலையால் குடிசை அமைத்தனர். அதில் சிறுமியை அமர வைத்தனர்.

கிணற்றில் விளக்கு ஏற்றினர்

தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து குடிசையில் இருந்த சிறுமியை வெளியே அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆவாரம் பூ வைத்திருந்த கூடையை சிறுமி தலையில் வைத்து சுமந்தபடி ஊர் எல்லையில் உள்ள கோவில் கிணற்றுக்கு அழைத்து சென்றனர்.

கிணற்றின் படிக்கட்டு வழியாக சிறுமியுடன் உள்ளே இறங்கினர். பின்பு கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை எடுத்து அதன் மீது மண் கலயத்தில் விளக்கு ஒன்றை வைத்தனர். நிலா பெண்ணான சிறுமி அந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்தாள். அதன்பின்பு கிராம மக்கள் ஊர் திரும்பினர். கிணற்றில் ஏற்றிய விளக்கு 7 நாட்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வினோத வழிபாட்டினை பாரம்பரியமாக சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story