கரூா் பகுதியில் விநாயகா் சிலை விற்பனை மும்முரம்


கரூா் பகுதியில் விநாயகா் சிலை விற்பனை மும்முரம்
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூா் பகுதியில் விநாயகா் சிலை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கரூர்

விநாயகர் சிலைகள்

நமது நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 31-ந் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளை வியாபாரிகள் ஏற்கனவே முடுக்கி விட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கே வந்துவிட்டன. இந்தவகையில் கரூர் ஜவகர் பஜார், மற்றும் திருமாநிலையூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் பலவிதமான வடிவங்களில் பல வண்ண விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

பல்வேறு ஆயுதங்களுடன்....

இந்தநிலைகள் அரை அடி முதல் ஏழு அடி உயரம் வரை சிலைகள் செய்கின்றனர். சிறிய சிலைகள் அச்சில் வார்க்கப்பட்டு நிழலில் காயவைக்கப்படுகின்றன. அதன்பின் வர்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. 3 அடி முதல் 5 அடி வரை உள்ள சிலைகள் கையினால் நுட்பமான வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படுகின்றன. கைகளில் சங்கு, சாட்டை, எழுத்தாணி, தும்பிக்கையில் மணி போன்ற பல்வேறு ஆயுதங்களுடன் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.மண்ணால் தயாரிக்கப்படும் இச்சிலைகள் நீர்நிலைகளில் எளிதில் கரையும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. அச்சுகளில் கல்யாண விநாயகர், தம்புரா விநாயகர், லட்சுமி விநாயகர், வெற்றிலை விநாயகர் என பல ரகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

பூஜை பொருட்களும் விற்பனை

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் விநாயகருக்கு படைப்பதற்கு பல பூஜை பொருட்கள் இதேபோல் விநாயகர் சிலையின் மீது வைக்கப்படும் அழகிய குடைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.இந்த குடைகள் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த சிலைகள், குடைகளை வாங்கி சென்றார்கள். பூஜை பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடந்தது. ஆரம்ப காலங்களில் களிமண்ணில் தான் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வந்தன. பின்னர் விஞ்ஞான வளர்ச்சியினால் ரசாயனப் பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. கடல், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் போடப்படும் ரசாயன விநாயகர் சிலைகள், தண்ணீரை கெடுக்கத் தொடங்கின. இதையடுத்து ரசாயனங்களை கொண்டு விநாயகர் சிலைகளை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


Next Story