கீழடியில் கூடுதல் அடுக்குகளுடன் தென்பட்ட உறைகிணறு..!


கீழடியில் கூடுதல் அடுக்குகளுடன் தென்பட்ட உறைகிணறு..!
x

கீழடியில் தற்சமயம் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கூடுதல் அடுக்குகளுடன் உறைகிணறு தென்பட்டுள்ளது.

திருப்புவனம்:

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்சமயம் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி கீழடி மட்டுமின்றி அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறுகிறது.

கீழடியில் இதுவரை 10 குழிகள் வரை தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மேற்கொண்டதில் கண்ணாடி பாசிமணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண்மணிகள், காதணிகள், சங்கு வளையல்கள், யானை தந்ததால் செய்யப்பட்ட பகடைக்காய், சுடுமண்ணால் செய்த சில்லு வட்டுக்கள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள், பழங்கால பெரிய பானைகள், சேதமடைந்த செங்கல் சுவர் உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஒரு குழியில் ஆழமாக தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டதில் சுடுமண் உறைகிணறு தென்பட்டது. மிகவும் நேர்த்தியாகவும், வட்ட வடிவமாகவும் அந்த உறைகிணறு அழகாக இருந்தது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் செய்த போது உறைகிணற்றில் ஐந்து சுடுமண் அடுக்குகள் வரை தெரியவந்தது.

சில தினங்களுக்கு முன்பு மேற்கொண்டு தொடர்ந்து ஆழமாக தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் செய்த போது மேலும் கூடுதலாக இரு அடுக்குகள் தெரிய வந்துள்ளது. தற்சமயம் ஏழு அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு தெரிகிறது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது இன்னும் கூடுதலாக அடுக்குகள் கிடைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story