தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்


தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் இன்று நடக்கிறது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

தொழிற்பழகுநர் பயிற்சி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறையில் உள்ள ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

மேலும் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படைப் பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம். இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7 ஆயிரம் முதல் நிறுவனத்தால் வழங்கப்படும்.

இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறும், மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை. தொலைபேசி எண்:04362-278222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story