விடுதியில் சாப்பிட்டு வாந்தி-மயக்கம்:மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்-அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
விடுதியில் உணவு சாப்பிட்டு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
பொள்ளாச்சி
விடுதியில் உணவு சாப்பிட்டு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
சாலை மறியல்
பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூரில் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு பள்ளிகளை சேர்ந்த 34 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு உணவு சாப்பிட்ட மாணவர்கள் 5 பேருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திடீரென்று மாணவர்கள் தொண்டாமுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விடுதி வார்டன் மீது புகார்
அப்போது மாணவர்கள் தரப்பில் சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை, குடிநீரில் எறும்புகள் கிடக்கின்றன. கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், பெற்றோரிடம் செல்போனில் பேசுவதற்கு அனுமதிப்பதில்லை. தவறான வார்த்தையால் பேசுவதாகவும், விடுதி வார்டனை மாற்ற வேண்டும் என்று பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து வருவாய் துறை, ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் விடுதி வார்டன் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது.