நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 14.30 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


நாமக்கல் மாவட்டத்தில்  6 தொகுதிகளில் 14.30 லட்சம் வாக்காளர்கள்  வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 9 Nov 2022 6:45 PM GMT (Updated: 9 Nov 2022 6:47 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 14.30 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 ெதாகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டார். மொத்தம் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 1,627 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதன்படி ராசிபுரம் தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், நாமக்கல் தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளும், பரமத்திவேலூர் தொகுதியில் 254 வாக்குச்சாவடிகளும், திருச்செங்கோடு தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளும் மற்றும் குமாரபாளையம் தொகுதியில் 279 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

இதனிடையே அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் தொகுதிக்குள் மாற்றம் தொடர்பான படிவங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அவற்றின் மீது விசாரணை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டார். அதனை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கவிதா, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, தாசில்தார்கள் சக்திவேல் (நாமக்கல்), பிரகாஷ் (தேர்தல்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

14,30,953 வாக்காளர்கள்

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 631 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 36 ஆயிரத்து 137 பெண் வாக்காளர்கள் மற்றும் 185 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 வாக்காளர்கள் உள்ளனர்.

இதனிடையே வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் தபால் அலுவலகம் மூலமாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது‌.

மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என கூறப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம்கள்

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, நேற்று முதல் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. அதில் 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அதோடு இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 686 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிப்பதோடு, வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதையும் செய்து கொள்ளுமாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

சைக்கிள் ஊர்வலம்

இதனுடைய நேற்று நாமக்கல்லில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதையொட்டி, விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.


Next Story