விருத்தபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்


விருத்தபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

விருத்தபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

விருத்தபுரீஸ்வரர் கோவில்

அன்னவாசலில் பிரசித்தி பெற்ற விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தர்மசம்வர்த்தினி அம்மாள், சோமாஸ் ஸ்கந்தர் அம்பாளை தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து மேள, தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது.

ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் சாலை பொன்னம்மா மதுரம், அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

இதைதொடர்ந்து காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.


Next Story