குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை என எச்சரிக்கை


குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை என எச்சரிக்கை
x

குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்படி, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ரவுடிகளின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நன்னடத்தை பிணை ஆணை பெற்ற 4 ரவுடிகள் பிணை ஆணையை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தால், அவர்கள் பிணை முறிவு ஆணை பெறப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் 60-க்கும் மேற்பட்டோர் தாங்களாகவும், வக்கீல் மூலமாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். மேலும் பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துதல், கட்டப்பஞ்சாயத்து, வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள், என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.


Next Story