ஈரோடு டி.எஸ்.பி.க்கு 'வாரண்டு' -சென்னை கோர்ட்டு உத்தரவு


ஈரோடு டி.எஸ்.பி.க்கு வாரண்டு -சென்னை கோர்ட்டு உத்தரவு
x

ஈரோடு டி.எஸ்.பி.க்கு ‘வாரண்டு' சென்னை கோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை திருவல்லீஸ்வரர் இளங்கோ தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த உமா ரமணன் (வயது 23), அமலன் (27) ஆகியோரை கடந்த 2008-ம் ஆண்டு திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

இலங்கை தமிழர்களான இவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், மின்சார பேட்டரிகள், சூரிய சக்தி மின் விளக்குகள், மின்னணு பொருட்கள், மோட்டார் உதிரி பாகங்கள், ஸ்பார்க் ப்ளக், ஒயர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆயுத பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் சாட்சியான அப்போதைய திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஆறுமுகம் (இவர், தற்போது ஈரோடு மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார்) ஆஜராக கோர்ட்டு 3 முறை சம்மன் அனுப்பியது.

இருந்தபோதிலும், அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு ஜாமீனில் வரக்கூடிய வாரண்டு பிறப்பித்த நீதிபதி எஸ்.அல்லி, அக்டோபர் 4-ந் தேதி இரு ஜாமீன்தாரர்களுடன் டி.எஸ்.பி. ஆறுமுகம் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.


Next Story