பழவாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்


பழவாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்
x

மணல்மேடு அருகே பழவாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மணல்மேடு,

மணல்மேடு அருகே பழவாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகாயத்தாமரை செடிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் பழவாறு செல்கிறது. இந்த ஆறு, வரக்கடை, பாக்கம், காவளமேடு, கொற்கை, தாழஞ்சேரி, நாராயணமங்கலம், வில்லியநல்லூர், மேலாநல்லூர், நடராஜபுரம், பட்டவர்த்தி வழியாக சீர்காழி வரை சென்று கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் மூலம் மேற்படி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். மேலும் இந்த ஆறு மழைநீர் வடிகாலாகவும், நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் உள்ளது.

தண்ணீர் செல்ல தடை

இந்த ஆற்றில் மணல்மேடு அருகே வரக்கடை என்ற கிராமத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்து காணப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் இருப்பது கூட தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து கிடப்பதால் பாசனத்துக்கு கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது.

அகற்ற கோரிக்கை

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடப்பதால், பழவாற்றில் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் மேற்கண்ட கிராமங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் வரக்கடை பகுதியில் செல்லும் பழவாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனா்.


Next Story