சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது


சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது
x

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 300 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது.

திருவள்ளூர்

8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்து

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை -தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்து காணப்படுகிறது. ஏரிகளில் மொத்தம் 7.310 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7.657 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தட்டுப்பாடு இன்றிவழங்க முடியும்

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்லேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எனவே பூண்டி ஏரியில் கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மேலும் கிருஷ்ணா நீர் தொடர்ந்து வரும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீரை அனுப்பி சேமித்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூண்டி ஏரியில் நீர் இருப்பு 1.015 டி.எம்.சி.

பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 1.015 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3.645 டி.எம்.சி.யில் 2.613 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் 3.300 டி.எம்.சி.யில் 2.459 டி.எம்.சி.யும், சோழவரம் ஏரியில் 1.081 டி. எம்.சி.யில் 762 மில்லியன் கன அடி தண்ணிர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் 468 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.


Next Story