ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75ஆயிரம் கன அடியாக சரிவு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75ஆயிரம் கன அடியாக சரிவு
x

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 75ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.

சேலம்:

கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கபினிமற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

மேலும் தமிழக நீர் பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டு, நாட்றாபாளையம் உள்ளிட்ட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது.இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலை வந்து அடைந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகா கேரளாவில் மழை பெய்வது குறைந்ததால் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று ஒகேனக்கலுக்கு 98 ஆயிரம்கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி இன்று 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ இறங்கவோ கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நடைபாதை உள்ளிட்ட பகுதியில் தண்ணீரில்அடித்து செல்லப்பட்ட மரங்கள் செடிகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. காவிரி நுழைவிடமான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story