கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளும் முழுவதுமாக நிரம்பி விட்டதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு கடிதம் எழுதினர்.

அதன்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது. இந்த நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கிணறு மதகு சேதமடைந்துள்ளது. இந்த மதகு கிணற்றை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்த கிருஷ்ணா நீர் கால்வாய் சீரமைப்பு பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக அல்லாமல் முழுவதுமாக நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதனை அடுத்து பூண்டிக்கு தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது.




Next Story