யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு -கவர்னர் பேச்சு


யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு -கவர்னர் பேச்சு
x

யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

சிதம்பரம்,

உலக யோகா தினத்தையொட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை விளையாட்டு மைதானத்தில் யோகாசன நிகழ்ச்சி நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு யோகாசன நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மனைவி லெட்சுமி மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்தார்.

கோவில்பட்டியை சேர்ந்த 9 வயது சிறுமி ரவீணா 133 திருக்குறள் அதிகாரத்தை யோகா மூலம் வெளிப்படுத்தினார்.

சீர்காழியை சேர்ந்த கின்னஸ் சாதனை மாணவி சுபானு 108 சிவதாண்டவத்தை நடனம் மூலம் விளக்கினார். மேலும் ஆணிப்படுக்கையின் மீதும் அமர்ந்தும் யோகாசனம் செய்து அசத்தினார்.

இதில் கடலூர் மட்டுமின்றி சென்னை, விழுப்புரம், நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 850-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.

கவர்னர் பார்வையிட்டார்

தொடர்ந்து ஆதரவற்றோர் பள்ளி மாணவர்கள் யோகாசனம், பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதை கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லெட்சுமியுடன் சேர்ந்து பார்வையிட்டார்.

அதன்பிறகு சிறப்பாக யோகாசனம் செய்த மாணவர்கள், ஏற்பாடு செய்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.அதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

மகிழ்ச்சி

யோகா என்பது நமது நாட்டிற்கு கிடைத்த பரிசு. யோகா தினம் பல நாடுகளை தாண்டி, இனம், மதம், அரசியலை தாண்டி வரவேற்கப்படுகிறது. நமது நாட்டில் யோகா சிதம்பரத்தில் தொடங்கி, நாடு முழுவதும் பரவி உள்ளது. திருமூலர் திருமந்திரத்தில் யோகாவை பற்றி சொன்னதை பதஞ்சலி முறைப்படுத்தி செயல்படுத்தினார்.

யோகா ஒரு சூத்திரம். உங்கள் உடம்பை மகிழ்ச்சியாக வைக்கவும், நமது வாழ்க்கையை சமப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. நமது மனது பலவற்றை அதிகப்படியாக சிந்திக்கும்போது அதனை ஒருமுகப்படுத்த யோகா உதவுகிறது.

நமது உடல் முக்கியம் என்றாலும் நமது மனநிலை மிகவும் முக்கியம். அதனை பாதுகாக்க யோகா பெரிதும் உதவுகிறது.

தமிழகம் குறிப்பாக சிதம்பரம் யோகாவின் பிறப்பிடமாக உள்ளது. இதை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story