காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க ஒன்றாக போராட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க ஒன்றாக போராட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க ஒன்றாக போராட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண்மைக்கு தண்ணீர் வழங்கும் காவிரி ஆறு உழவர்களின் தாய் என்றால், காவிரியில் வெள்ளம் போல வரும் தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப வழங்கும் மேட்டூர் அணைதான் உழவர்களின் தந்தை. அந்த உழவர்களின் தந்தைக்கு இன்று 90-ம் பிறந்தநாள். 1924-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப்பணிகள் 1934-ம் ஆண்டில் நிறைவடைந்து அந்த ஆண்டின் ஆகஸ்டு 21-ந்தேதிதான் அணை திறக்கப்பட்டது. 89 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்களை செழிக்கச்செய்து கொண்டிருக்கும் மேட்டூர் அணைக்கு அதன் பிறந்தநாளில் வாழ்த்துகளுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேட்டூர் அணை என்பதே புரட்சியின் அடையாளம்தான். காவிரியின் குறுக்கே மேட்டூர் அணையை கட்ட பல பத்தாண்டுகளாக மைசூர் சமஸ்தானம் அனுமதி அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கர்நாடகத்தின் எதிர்ப்புகளையெல்லாம் மீறி கட்டப்பட்டதுதான் மேட்டூர் அணை ஆகும்.

மேட்டூர் அணைக்கு முன்பாக மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதன் மூலம் மேட்டூர் அணையை பயனற்றதாகவும், பாலைவனமாகவும் மாற்ற கர்நாடக அரசு சதி செய்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது. கர்நாடகத்தின் இந்த சதித்திட்டத்தை முறியடிக்க ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story