மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி


மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x

மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி

மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி, தஞ்சையில் தூர்வாரும் ஆய்வுப்பணிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

'டெல்டா' உரிமையை விட்டுக்கொடுக்காது

வேளாண் பட்ஜெட் ஒவ்வொரு வருடமும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த அரசு வேளாண்துறைக்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய இடங்களில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு அறிவித்தவுடனே அதை எதிர்த்து தமிழக அரசு போராடியது. ஒருபோதும் இதை அனுமதிக்கமாட்டோம் என்று சட்டமன்றத்தில் நானே அறிவித்தேன். இதன் விளைவாக ஏல அறிவிக்கையை ஒன்றிய அரசு ரத்து செய்தது உங்களுக்கு தெரியும். டெல்டா உரிமைகளை விட்டுக்கொடுக்காத வகையில் தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படும். அதேபோல காவிரி டெல்டா பகுதியின் வேளாண் வளர்ச்சிக்கும், இந்த பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரவும் முன்னுரிமை அளித்து செயல்படுவதை நீங்களெல்லாம் அறிவீர்கள்.

96 சதவீதம் பணி நிறைவு

2022-23-ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் காவிரி பாசன பகுதிகளில் தூர்வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் செல்ல தூர்வாரும் பணி துரிதமாக நடந்தது. மேட்டூர் அணை மே மாதம் 24-ந் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது. தண்ணீர் வந்து சேருவதற்கு முன்பே 4 ஆயிரத்து 964 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களில் அனைத்து தூர்வாரும் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு இடுபொருட்களும், கூட்டுறவு வங்கி கடன்களும் முழுமையாக கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக 2022-23-ம் ஆண்டில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 13 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 41 லட்சத்து 45 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, இதன் மூலம் வேளாண் புரட்சி தொடர்ச்சியாக நடந்தது.

இந்த ஆண்டும் இதேபோன்ற திட்டமிடலை தமிழக அரசு செய்துள்ளது. நீர்வளத்துறை மூலம் தூர்வாரும் பணிக்காக ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டது. சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 4 ஆயிரத்து 773 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 96 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகளும் குறிப்பிட்ட சில நாட்களில் முழுமையாக முடிக்கப்படும்.

பாசன பரப்பு அதிகமானது

வேளாண் பொறியியல்துறை மூலம் ரூ.5 கோடி செலவில் 1,146 கி.மீ. நீளமுள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 651 கி.மீ. நீளம் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 45 சதவீத தூர்வாரும் பணி தொடர்ந்து விரைவாக நடந்து வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ரூ.27 கோடியே 17 லட்சம் செலவில் 1,433 கி.மீ. நீளமுள்ள சிறிய கால்வாய்கள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. ரூ.8 கோடியே 13 லட்சம் செலவில் 25 எண்ணிக்கையில் குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படக்கூடிய குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந் தேதி நான் மேட்டூருக்கு சென்று டெல்டா பாசனத்துக்காக திறந்து வைக்க இருக்கிறேன்.

சென்ற ஆண்டுகளில் நாம் சாதித்து காட்டியதை போலவே மேட்டூர் அணை நீர் காவிரி டெல்டா பகுதிக்கு வருவதற்கு முன்பே அனைத்து தூர்வாரும் பணியும் சிறப்பாக முடிக்கப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். கடந்த 2 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் டெல்டா விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நெல் உற்பத்தியில் புதியதொரு சாதனையை படைப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். தி.மு.க. ஆட்சியில் வேளாண் உற்பத்தி அதிகமாகி இருக்கிறது. பாசன பரப்பு அதிகமாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

மேகதாது அணை

கேள்வி:- கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறார்களே. இது தொடர்பாக அங்குள்ள முதல்-அமைச்சரிடம் நீங்கள் பேசி தீர்வு காணுவீர்களா?.

பதில்:- புதிதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மட்டுமின்றி, ஏற்கனவே இருந்த ஆட்சியும் இதே தான் தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறி வருகிறார்கள். அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தோம். அதேநிலையில் தான் இந்த ஆட்சி இருக்கிறது. கருணாநிதி எந்த உறுதியுடன் இருந்தாரோ?. அதே உறுதியுடன் தான் இந்த ஆட்சி நிச்சயம் இருக்கும். அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

கேள்வி:- காப்பீடு திட்டத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்களே?.

பதில்:- அது ஆய்வில் இருக்கிறது. ஆய்வுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.

கேள்வி:- 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை சந்தித்தீர்களே?. அவர்கள் எந்தவிதமான கோரிக்கை வைத்தார்கள். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறதே?.

பதில்:- அதுபோன்ற கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. அவர்களுக்கான ஊதியத்தை முறையாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தான் வைத்தார்கள். அதற்கு எங்கெங்கு புகார்கள் இருக்கிறதோ? அது குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்று கூறி உள்ளோம்.

கவர்னரை மாற்ற...

கேள்வி:- கவர்னர் தமிழக அரசு நிறைவேற்றுகிற பல சட்டமசோதாக்களுக்கு தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் இதற்கு தீர்வு என்ன?

பதில்:- நாங்களும் நீதிமன்றத்தை நாடலாமா? என சட்ட வல்லுனர்களோடு கலந்து ஆலோசித்து கொண்டு இருக்கிறோம்.

கேள்வி:- கவர்னரை மாற்றுவதற்கு கோரிக்கை வைப்பீர்களா?.

பதில்:- நாங்கள் நினைக்கிறது எல்லாம் நடந்தால் இந்த பிரச்சினையே இல்லை.

பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர்

கேள்வி:- எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதியின் பெயர் வைக்கப்படுமா?.

பதில்:- நிச்சயமாக அது பரிசீலிக்கப்படும். இருக்கிற பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் வைக்கலாமா?. அல்லது புதிதாக உருவாக்கும் பல்கலைக்கழகத்துக்கு வைக்கலாமா? என பரிசீலித்து யோசித்து முடிவு செய்வோம்.

கேள்வி:- தமிழ்நாட்டில் முக்கிய பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு 2 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படாமல் இருக்கிறது. இதற்கு கவர்னர் தான் காரணம் என்கிறார்களே?.

பதில்:- ஏற்கனவே உயர்க்கல்வித்துறை அமைச்சர் தெளிவாக சொல்லி இருக்கிறார். திரும்பவும் நானும் அழுத்தமாக கூறுகிறேன். அது உண்மை தான்.

அமைச்சரவையில் மாற்றமா?

கேள்வி:- பட்டம் பெற முடியாமல் உள்ள மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.

பதில்:- அதற்கு தான் பல்கலைக்கழகத்தில் வேந்தர்களாக முதல்-அமைச்சரே இருக்க வேண்டும் என்று நாங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டுள்ளோம்.

கேள்வி:- டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கான எண்ணம் இருக்கிறதா?.

பதில்:- ஏற்கனவே சொல்லி இருக்கிறோமே?. இந்த ஆண்டுகூட 500 கடைகளை குறைப்பதாக அறிவித்துள்ளோம்.

கேள்வி:- அமைச்சரவையில் மாற்றம் இருக்க வாய்ப்பு இருக்கிறதா?. உதயநிதி துணை முதல்-அமைச்சர் ஆவார் என்று கூறுகிறார்களே?.

பதில்:- இப்போது வரும் செய்தி ஒன்றியத்தில் தான் அமைச்சரவை மாற்றம் வரும் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

மின்கட்டண உயர்வு

கேள்வி:- தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறதே?. மின்கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.

பதில்:- அது திட்டமிட்டே பரப்பப்படும் பொய் பிரசாரம். வீட்டு இணைப்பை பொறுத்தவரை மின்கட்டணத்தை எக்காரணத்தை கொண்டும் உயர்த்தமாட்டோம் என உறுதியாக கூறி இருக்கிறோம். இது குறித்து புள்ளிவிவரத்துடன் கூறுகிறேன். வீட்டு இணைப்புக்கு எந்தவிதமான கட்டண உயர்வும் கிடையாது. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகளும் தொடரும். ஒன்றிய அரசு விதிமுறைப்படி 4.7 சதவீத கட்டணம் அதிகரிக்க வேண்டும் என சட்டம் போட்டுள்ளார்கள். ஆனால் 2.18 சதவீதமாக அதை குறைத்து அந்த தொகையையும் மானியமாக தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, மின் வாரியத்துக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டு இணைப்புக்கு எந்த கட்டண உயர்வும் இருக்காது. வணிகம் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு மட்டும் 13 பைசாவில் இருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும் என்று தெளிவாக கூறி இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற மாநிலங்களில் இதைவிட அதிகம். அ.தி.மு.க. ஆட்சியில் செங்குத்தாக மின்கட்டணத்தை உயர்த்தினார்கள். மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்துவிட்டு சென்று விட்டார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டது அ.தி.மு.க. ஆட்சி. அதனால் தான் இந்த கோளாறு நடைபெற்று வருகிறது. இது தான் உண்மை.

நாடாளுமன்ற தேர்தல்

கேள்வி:- அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் வருவதை தடுப்போம் என்று கூறி இருக்கிறீர்களே?.

பதில்:- ஆம், அதில் உறுதியாக இருக்கிறோம்.

கேள்வி:- ஆவின் நிறுவனத்தில் சிறுவர்களை பணிக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு கூறி இருக்கிறார்களே?.

பதில்:- அது தவறான செய்தி. அந்த துறையின் அமைச்சர் அன்றைக்கு அதை மறுத்துவிட்டார். போலியாக ஆதாரம் தயாரித்து பரப்பியுள்ளார்கள். அதில் உண்மை இல்லை.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டீர்களா?. புதிதாக கட்சிகள் ஏதும் உங்களுடன் கூட்டணிக்கு வருகிறதா?.

பதில்:- இது குறித்து ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசி இருக்கிறேன். வருகிற 23-ந் தேதி பீகார் மாநில முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் ஒரு கூட்டத்தை கூட்ட உள்ளார். அதில் முடிவு எடுக்கப்படும். அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.

கேள்வி:- தமிழகத்தில் 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு இருப்பதாக கூறப்படுகிறதே?.

பதில்:- கண்காணிப்பு கேமரா இல்லை என்ற காரணத்தை கூறி ரத்து செய்வதாக கூறினார்கள். இது தொடர்பாக அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பி உரிய விளக்கம் அளித்து, தற்போது 3 மருத்துவக்கல்லூரிகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.


Related Tags :
Next Story