இந்தி திணிப்பை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்


இந்தி திணிப்பை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்
x

இந்தி திணிப்பை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

விழுப்புரம்

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பா.ம.க. புதிய நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சிவக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மாநில ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் தீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. கட்சி தொடங்கி, 18 வருடங்களில் ஆட்சிக்கு வந்தார்கள். அ.தி.மு.க. கட்சி தொடங்கி 6 வருடங்களில் ஆட்சிக்கு வந்தனர். நாம் கட்சி தொடங்கி 34 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை. நம்மிடம் அனைத்து திறமைகள் இருந்தும் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் 2026-ல் நிச்சயமாக தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி நடக்கும்.

ஆகவே நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை களைய வேண்டும். புதிய பொறுப்பாளர்கள் வேகமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் (கிழக்கு) ஜெயராஜ், (மத்திய) பாலசக்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மது விற்பனையில் முதல் இடம்

முன்னதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டிலேயே அதிக குடிசைகள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். தமிழ்நாட்டில் கல்வியில் கடைசி 2 இடத்தில் இருக்கின்ற மாவட்டமும் விழுப்புரம் மாவட்டம், டாஸ்மாக் கடை மது விற்பனையில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் முதன்மை மாவட்டம். இந்த குறியீடுகளை பார்த்தால் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற நீண்ட ஆண்டுகள் ஆகும். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்த வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் ஆண்டிற்கு 30 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. எனவே நீர் செல்லும் வழியில் ஒவ்வொரு 10 கி.மீட்டருக்கும் ஒரு தடுப்பணைகள் கட்ட வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஆபத்தானது

மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இது அபத்தமானது, ஆபத்தானது. இந்தி திணிப்பை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், கடுமையாக எதிர்ப்போம்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 50 விழுக்காடுகள் கூட முடிக்கப்படவில்லை. ஆனால் 95 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறுகின்றனர். இன்னும் 10 நாட்களில் வடகிழக்கு பருவமழை வருகிறது. எனவே விரைந்து ஏரிகளை தூர்வாரி, தண்ணீரை சேமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story