கவர்னரிடம் 21-ந் தேதி புகார் அளிப்போம்


கவர்னரிடம் 21-ந் தேதி புகார் அளிப்போம்
x

போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக வருகிற 21-ந் தேதி கவர்னரிடம் புகார் அளிக்கப்போவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக வருகிற 21-ந் தேதி கவர்னரிடம் புகார் அளிக்கப்போவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

நடமாடும் வாகன சேவை

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. சார்பில் நமக்காக நம்ம எம்.எல்.ஏ. என்ற தலைப்பில் மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் வாகன சேவை தொடக்க நிகழ்ச்சி கெம்பட்டிகாலனியில் நேற்று நடைபெற்றது. இதை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இதில், டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

இதையடுத்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

போலி பாஸ்போர்ட்

மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டது குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் அளிக்க உள்ளோம். இதுதொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக வருகிற 21-ந் தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம்.

முதல்-அமைச்சர் தேச பாதுகாப்போடு விளையாட வேண்டாம். இந்த விவகாரத்தில் இதுவரை ஒரு சார்ஜ் மெமோ கூட கொடுக்க வில்லை. எந்த ஆட்சியில் நடந்து இருந்தாலும் முதல்-அமைச்சர் முன்னுதாரணமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்டமாக நடத்த வேண்டும்.

கல்லூரிக்குள் அரசியல்

திருப்பூர் கல்லூரிகளில் 'செல்பி வித் அண்ணா' நிகழ்ச்சிக்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேள்விப்பட்டதும் கல்லூரிகளுக்கு முன்பு அனுமதியில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என தொண்டர்களிடம் கூறி உள்ளேன். கல்லூரிக்குள் அரசியல் வேண்டாம் என்பது தான் எனது நிலைப்பாடு.

அ.தி.மு.க. உட்கட்சி விசயத்தில் பா.ஜ.க. நுழையாது. பா.ஜ.க., அ.தி.மு.க. உறவு தொடர்கிறது. அ.தி.மு.க. தலைமையை முடிவு செய்யும் அதிகாரம் அக்கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகி களுக்கும் தான் உண்டு. தலைமை விவகாரத்தில் அக்கட்சியினரின் முடிவை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளும்.

ஊழல் புகார்

அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய நிதி மந்திரியின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறோம். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஏகமனதாக இந்த வரி போடப்பட்டது. இதில் அரசியல் செய்வது நன்றாக இருக்காது.

தமிழகத்தில் தற்போது நடந்த ஊழல்கள் தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்து உள்ளோம். மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற மாநில அரசு செயல்படுகிறது. முறையாக விசாரணை இல்லை எனில் நீதிமன்றத்திற்கு செல்வோம்.

தி.மு.க.வுடன் பகை கிடையாது

பொங்கல் தொகுப்பு ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண் டும். கவர்னரை வம்பு சண்டைக்கு இழுப்பது தான் தி.மு.க.வின ரின் முழு நேர வேலை. பெரியார் பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதுகலை வரலாறு கேள்வித் தாளில் 10-வது கேள்வி பெரியாருக்கு யார் பட்டம் கொடுத்தது எனவும், 11-வது கேள்வி சாதி பற்றியும் உள்ளது.

ஒரு கையில் பெரியாரையும், மறு கையில் சாதியையும் வைத்துக் கொண்டு தி.மு.க. அரசியல் செய்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் நடந்த தவறை முதல்-அமைச்சர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். நான் தி.மு.க.வினரை வசைபாடவில்லை. தி.மு.க தான் என்னை வசைபாடுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய் பிரசாரம் செய்கிறது. தி.மு.க.வுக்கும், பா.ஜ.க. வுக்கும் எந்த பகையும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story