"கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்கள் உரிமையை காப்போம்" -மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்கள் உரிமையை காப்போம் -மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்கள் உரிமையை காப்போம் என்றும், 1974-ல் நடந்த இந்திய-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார் எனவும் மண்டபத்தில் நேற்று நடந்த மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

கச்சத்தீவை மீட்டெடுத்து மீனவர்கள் உரிமையை காப்போம் என்றும், 1974-ல் நடந்த இந்திய-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார் எனவும் மண்டபத்தில் நேற்று நடந்த மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மீனவர்கள் நல மாநாடு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நேற்று தமிழக அரசு சார்பில் நடந்த மீனவர் நல மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில், கடலுக்கு செல்லும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்கின்றன. இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை தாக்குவதை இலங்கை அரசு வழக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக 2014-ல் மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தபிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறை அதிகமாகி உள்ளது.

9 ஆண்டு காலத்தில் நடந்ததா?

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து சித்ரவதை செய்கிறது. மீனவர்களை விடுவித்தாலும், படகுகளை தராமல் அதனை உடைக்கிறது.

2014-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பா.ஜனதா சார்பில் 'கடல் தாமரை' என்னும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என கூறினர். ஆனால், கடந்த 9 ஆண்டு கால மத்திய பா.ஜனதா ஆட்சியில் ஏதாவது நடந்ததா?

ராமநாதபுரம் வந்த பிரதமர் மோடி, மீனவர்கள் தாக்கப்படுவது காங்கிரஸ் அரசின் பலவீனம் என்றார். மீனவர்கள் வாழ்வு சிறக்க சபதம் ஏற்பதாக குமரியில் பேசினார். ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு மீனவர்கள் தாக்கப்படவில்லையா? அந்த சபதத்தை நிறைவேற்றினாரா? ஒவ்வொரு முறையும் மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக நான் கடிதம் எழுதிய பிறகுதான் அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கின்றனர்.

619 தமிழக மீனவர்கள் கைது

2020-ம் ஆண்டு முதல் இதுவரை தமிழக மீனவர்கள் மீது 48 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 619 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 83 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போதெல்லாம் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆனால் சிலர், இதற்கு எல்லாம் காரணம் தி.மு.க. ஆட்சிதான், என்கிறார்கள். கச்சத்தீவை தி.மு.க. தாரைவார்த்ததாக உளறிக்கொண்டிருக்கின்றனர். 1971-ல் இலங்கை அரசு கச்சத்தீவை சொந்தம் கொண்டாடியபோது, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்ற ஆதாரங்களை திரட்ட உத்தரவிட்டார்.

தி.மு.க. ஆதரிக்கவில்லை

பின்னர் கச்சத்தீவு இந்தியாவுக்குதான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973-ம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்டார். அதை மீறி 1974-ல் கச்சத்தீவு ஒப்பந்தம், இந்திய- இலங்கை நாட்டு பிரதமர்களால் போடப்பட்டது. அது ஒப்பந்தம் தானே தவிர சட்டம் அல்ல. அப்படி எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் இல்லை.

அதனை தி.மு.க. ஆதரிக்கவும் இல்லை. இந்த ஒப்பந்தம் பற்றி உடனடியாக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை முதல்-அமைச்சர் கருணாநிதி சந்தித்து, கச்சத்தீவை தரக்கூடாது என வலியுறுத்தி, அது நமக்கு சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை அளித்தார். சென்னை திரும்பியதும் புதிய ஆதாரங்களை வைத்து, அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்ச்சுக்கீசியர் கால வரைபடங்கள் கூட அதைத்தான் தெரிவிக்கின்றன.

இலங்கை வரைப்படத்திலேயே இல்லை

1954-ம் ஆண்டு இலங்கை அரசு வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று அதில் இல்லை.

கச்சத்தீவுக்கு செல்லும் பகுதியிலும் அதன் மேற்கு பகுதியில் சங்கு எடுக்கக்கூடிய உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்குத்தான் இருந்தது என்பதை விளக்கவும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அங்கு சங்கு எடுப்பதற்காக அவர் எந்த காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது கிடையாது.

கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்று பல்வேறு ஆதாரங்களை திரட்டி இந்திய அரசுக்கு கொடுத்ததே தி.மு.க. தலைவர் கருணாநிதிதான். அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி, செயலாளர் ஆகியோரை எல்லாம் சந்தித்து ஆதாரங்களை கொடுத்தார்.

அ.தி.மு.க. வெளிநடப்பு

இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது மூலம் இந்தியாவிற்கு அல்ல, தமிழ்நாட்டிற்குதான் ஆபத்து என்று தி.மு.க. உறுப்பினர் முரசொலிமாறன், செழியன் ஆகியோர் தங்கள் எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட 3-வது நாளில் 29-6-1974 அன்று கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்த அந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான். அன்று முதல் இன்று வரை தமிழகத்திற்கு துரோகம் செய்வதை அ.தி.மு.க. தொடர்ந்து செய்து வருகிறது.

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து சிறப்பு தீர்மானத்தை கருணாநிதி கொண்டு வந்தார். மேலும் கச்சத்தீவை தாரை வார்த்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கண்டன கூட்டங்கள் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டன. இந்த வரலாறு கூட தெரியாமல், இது பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல், குறைந்தபட்ச நேர்மை இல்லாமல் சிலர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

ரத்து செய்ய வேண்டும்

எனவே இந்திய அரசு இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு இப்போதாவது தொடங்கிட வேண்டும்.

பா.ஜனதா அரசு இந்த முயற்சியில் இறங்கவில்லை என்றால் அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும் புதிய அரசு இதனை நிறைவேற்றும் வகையில் நமது அரசியல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.

கச்சத்தீவை மீட்போம்

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காப்போம். மீனவர்களின் நலனை காக்கும் வகையில் தி.மு.க.வின் திராவிட மாடல் அரசு எப்போதும் செயல்படும். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அப்படித்தான் செயல்படுவான். அதற்கு மீனவ சமுதாயம் எப்போதும் போல எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story