அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம் - வைகோ அறிக்கை


அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம் - வைகோ அறிக்கை
x

அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1948 நவம்பர் 4 ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கரால் முன்மொழியப்பட்டு, 1949 நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு, 73 ஆண்டுகள் ஆகின்றன. இடைக்கால அரசின் பிரதமராக பண்டித ஜவஹர்லால் நேரு அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான குறிக்கோள் தீர்மானத்தை 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில் தாக்கல் செய்தார். அதில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கைகளும் அதற்கான நடைமுறைகளும் இடம் பெற்றிருந்தன.

அரசியல் சாசன வரைவுக் குழு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் நாள் அமைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கையை 1948 நவம்பர் 4 ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பிரிவின் மீதும் 1949 அக்டோபர் 17 வரை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் விரிவான விவாதம் நடந்தது. இதில் மொத்தம் 7653 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி விவாதம் நவம்பர் 14 ஆம் நாள் தொடங்கியது.

அனைத்து விவாதங்களும் நிறைவுபெற்று, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு 1949 நவம்பர் 26 ஆம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950 ஜனவரி 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அந்நாளே குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. வரலாற்றுப் புகழ்வாய்ந்த அரசியல் சாசன நாளான நவம்பர் 26 ஆம் நாள், இந்த ஆண்டு கல்லூரிகளில் 'முன்னுதாரண மன்னர்' மற்றும் 'கிராம பாரம்பரிய பஞ்சாயத்து' உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. கருத்தரங்கம் நடத்துவதற்கான கருத்துரைகளை இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (ICHR) தொகுத்து அளித்துள்ளவற்றை பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

பழங்காலத்திலிருந்தே உலகம் எங்கும் இந்தியர்கள் வசித்து வந்துள்ளனர். இதனால் பாரதம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். பாரதம் குறித்த எண்ணம் போற்றப்பட வேண்டும். அப்போதிருந்தே நாம் ஜனநாயகத்தைப் பின்பற்றி வந்திருக்கிறோம். பாரதத்திலிருந்துதான் ஜனநாயகம் எனும் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வேத காலத்திலிருந்தே 'ஜனபதம்' மற்றும் 'ராஜ்யம்' என இரண்டு வகையான அமைப்புகள் இருந்தன. இதிலிருந்துதான் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட அமைப்புகள் உருவாகின. கிராம பஞ்சாயத்துகள் அந்நிய படை எடுப்புகளிலிருந்து நமது பண்பாட்டை காப்பாற்ற உதவின.

இதனால்தான் நமது பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவை இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல அமைப்புகளைக் கொண்ட பாரதத்தில் ஜனநாயகம் என்பது சுமார் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்பதற்கு தற்போது சான்றுகள் கிடைத்துள்ளன. அதேபோல 'வேத இலக்கியம்' பிரபஞ்சத்தின் இருப்பு குறித்துப் பேசுகிறது. அனைத்து உயிரினங்களுக்கான அடிப்படை ஒற்றுமை குறித்து 'உபநிடதங்கள்' வலியுறுத்துகின்றன. 'பகவத் கீதை' அறிவையும், நல்லொழுக்கத்தையும் போதிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 26 ஆம் நாள் அரசியல் சட்ட நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து முறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு யூ.ஜி.சி மூலம் அறிப்பை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடந்த எட்டு ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன.

அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story