63 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


63 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 63 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 63 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்பஅட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 327 மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றில் தகுதியுடைய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இந்த கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோர் கடனுதவி, ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பண்ணைசாரா கடனுதவி மற்றும் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 44 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.25 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.22 ஆயிரத்து 860 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்கள், அறிவுசார் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான நூல்கள், 1 மாற்றுத்திறனாளிக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமன சான்று என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 64 ஆயிரத்து 800 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story