செந்தில் பாலாஜி என்ன புத்தரா? - அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் கவர்னருக்கு மரியாதையே இல்லாத சூழலை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது என்று அண்ணாமலை கூறினார்.
கோவை,
கோவை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
செந்தில் பாலாஜியை புத்தராகவும், உத்தமராகவும் திமுகவினர் சித்தரிக்கின்றனர். தங்கள் தவறுகளை மறைக்க கவர்னரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சிக்கின்றனர். திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை விட்டுவிட்டு கவர்னரை சீண்டிப் பார்க்கிறது. கவர்னரை ஒருமையில் பேசி, தரக்குறைவாக விமர்சிப்பது மிகவும் தவறானது.
தமிழகத்தில் கவர்னருக்கு மரியாதையே இல்லாத சூழலை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கூறுவதை கவர்னர் அப்படியே ஓப்பிக்க வேண்டுமா?. கவர்னர் அரசியல் பேசக்கூடாது என்று நானே சொல்லி இருக்கிறேன். தமிழ்நாடு அரசு கவர்னரை வில்லனாக காட்டுவதை ஏற்கமுடியாது. ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியது, அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் புலப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.