குறிஞ்சிப்பாடி வாலிபர் கொலைக்கான காரணம் என்ன?


குறிஞ்சிப்பாடி வாலிபர் கொலைக்கான காரணம் என்ன?
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 10 Feb 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே குறிஞ்சிப்பாடி வாலிபர் கொலையில் சரணடைந்த அவரது நண்பர், கொலைக்கான காரணம் குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

வாலிபர் கொலை

விழுப்புரம் அருகே ஆண்டிப்பாளையத்தில் கடந்த 1-ந் தேதி வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தகவலறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணா நகரை சேர்ந்த நடராஜன் மகன் சங்கரன்(வயது 35) என்பதும், இவரை அதே பகுதியைச்சேர்ந்த நண்பரான ராஜேந்திரன் மகன் தியாகு(35) என்பவர் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தியாகுவை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் அவர் கடந்த 2-ந் தேதி விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி தியாகுவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் சங்கரன் கொலையில் தியாகுவுக்கு வடலூரை சேர்ந்த சடையன் மகன் சரவணன்(46) என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

பரபரப்பு வாக்குமூலம்

இதை தொடர்ந்து தியாகுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நான், சங்கரனின் அக்காளை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். அதற்கு சங்கரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளாமல் அவருக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். அதன் பிறகு சில மாதங்கள் கழித்து என்னை ஒரு கும்பல் கழுத்தில் வெட்டிக்கொலை செய்ய முயன்றனர். இதுபற்றி நான் விசாரித்ததில் சங்கரன் தரப்பினர்தான் என்னை கொலை செய்ய முயன்றதை அறிந்தேன்.

மேலும் கடந்த 2020-ல் எனது சித்தப்பா மகன் அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கரன் உடந்தையாக இருந்தது வெகுநாட்கள் கழித்துதான் எனக்கு தெரிந்தது. இதுபோன்ற காரணங்களால் சங்கரன் மீது எனக்கு நாளுக்கு நாள் விரோதம் அதிகரித்தது. அவரை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டுமென முடிவு செய்தேன்.

சமாதானம் பேசுவதுபோன்று நடித்தேன்

இந்த சூழலில்தான் கடந்த மாதம் 31-ந் தேதியன்று உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் எனக்கும், சங்கரனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சங்கரனிடம் நான் சமாதானமாக செல்வதுபோன்று பேசி, இனி நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம், நாம் ஒற்றுமையாக இருப்போம் என்றுகூறி நடித்தேன். அதை சங்கரனும் நம்பிவிட்டார். பின்னர் இருவரும் காடாம்புலியூர் சென்று மது வாங்கினோம்.

அங்கு நான் ஏற்கனவே திட்டமிட்டபடி சங்கரனை தீர்த்துக்கட்ட சரவணனின் உதவியை நாடினேன். அதற்கு அவர், உதவி செய்வதாகவும், போலீசில் தன்னை எக்காரணத்தை கொண்டும் காட்டிவிடக்கூடாது என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதித்தேன். பின்னர் சங்கரனிடம், என்னை விழுப்புரம் ராமநாதபுரத்தில் உள்ள அக்காள் வீட்டில் இறக்கிவிட்டு நீங்கள் இருவரும் திரும்பி மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி வந்துவிடுங்கள் என்று சங்கரன், சரவணனிடம் கூறியதோடு செல்லும் வழியில் மது அருந்தலாம் என்று கூறினேன்.

வெட்டிக்கொன்றேன்

அதன்படி நாங்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் ராமநாதபுரத்துக்கு புறப்பட்டோம். பின்னர் ராமநாதபுரம் மலட்டாற்று பகுதியில் நாங்கள் 3 பேரும் அமர்ந்து மது அருந்தினோம். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் சங்கரன், சரவணனிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நான் கத்தியை எடுத்து சங்கரனின் பின்பக்க தலையில் வெட்டிக்கொலை செய்தேன். இதில் சங்கரன் இறந்ததும் அவரது உடலை கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் வீசிவிட்டு செல்லலாம் என்று நானும் சரவணனும் முடிவு செய்தோம்.

அதன் பிறகு சங்கரனின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றுக்கு புறப்பட்டோம். வழியில் ஆண்டிப்பாளையம் பகுதியில் ஒரு வேகத்தடையில் ஏறி, இறங்கும்போது நிலைதடுமாறி சங்கரன் உடலுடன் நாங்கள் இருவரும் கீழே விழுந்தோம். அந்த சமயத்தில் எதிரே ஏதோ வாகனம் வருவதற்கான வெளிச்சம் தென்பட்டது. இதனால் நாங்கள் இருவரும் யாரிடமாவது சிக்கிக்கொள்வோம் என்று எண்ணி சங்கரனின் உடலை அங்குள்ள காலியிடத்தில் வீசினோம். பின்னர் வந்த வழியே திரும்பி சம்பவ இடத்திற்கு சென்று ரத்தக்கறை படிந்த எங்கள் உடையை கழற்றி வேறு உடை மாற்றினோம். ரத்தக்கறை படிந்த உடையையும், கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் ராமநாதபுரம் மலட்டாற்றில் மறைத்து வைத்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடிக்கு வந்துவிட்டோம்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது.

2 பேர் கைது

பின்னர் சங்கரன் கொலை வழக்கு தொடர்பாக தியாகுவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் கொடுத்த தகவலின்பேரில் சரவணனையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு தியாகு, சரவணன் ஆகிய இருவரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.


Next Story