மின் கழிவுகளை கையாளும்போது விதிகளை மீறினால் 5 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை


மின் கழிவுகளை கையாளும்போது  விதிகளை மீறினால் 5 ஆண்டு சிறை:  கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2022 6:45 PM GMT (Updated: 7 Nov 2022 6:46 PM GMT)

மின் கழிவுகளை கையாளும்போது விதிகளை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

தேனி

மின் கழிவுகள்

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய அரசின் மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள்-2016-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின் கழிவுகளை சேகரித்து செயலாக்க முடியும்.

மேலும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மறுசுழற்சி செய்பவர்கள், புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும். பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு விளைவுகளை ஏற்படுத்துகின்ற வகையில் செயல்படும் நிறுவனங்கள் மின்னணு கழிவு (மேலாண்மை) விதிகள்-2016 விதி 21-ன் படி, இவ்விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்-1986-ன் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும்.

சிறை தண்டனை

இவ்வகையான செயல்களில் ஈடுபடும் மின் கழிவு கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் பிரிவு 5-ன் படி அந்நிறுவனத்தை மூடவும் அல்லது நிறுவனத்தில் மின்சாரம், குடிநீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டத்தின் பிரிவு 15-ன் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் மற்றும் மின் கழிவுகளை கையாளுபவர்கள் மின் கழிவுகளை எரிப்பது அல்லது முறைசாரா வர்த்தகம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story