தந்தையுடன் குளித்தபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பலி : சின்னமனூர் அருகே பரிதாபம்


தந்தையுடன் குளித்தபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பலி : சின்னமனூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 12:00 PM GMT)

சின்னமனூர் அருகே தந்தையுடன் குளித்தபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

தேனி

முல்லைப்பெரியாறு

சின்னமனூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் சுதர்சன் (வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தந்தையும், மகனும் சின்னமனூா் அருகே உள்ள கீழப்பூலானந்தபுரம் பகுதி முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றனர். பின்னர் இருவரும் ஆற்றில் இறங்கி ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தனர்.

சுதர்சன் மட்டும் சிறிது தூரம் தள்ளி சென்று தனியாக குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அவர் சிறிது தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதைக்கண்ட சிவக்குமார் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம்போட்டு கொண்டு சுதர்சனை மீட்க முயன்றனர். ஆனால் அவரால் முடியவில்லை.

மாணவர் சாவு

இதையடுத்து அவர் சின்னமனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி சுதர்சனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி தேடுதலுக்கு பிறகு சுதர்சனை மீட்டனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஆற்றில் மூழ்கியதில் மூச்சுத்திணறி சுதர்சன் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையுடன் குளித்தபோது முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story