பகலில் வெள்ளை மாளிகை; இரவில் வண்ண மாளிகை ஒளிரும் விளக்குகளால் ஜொலிக்கும் ரிப்பன் கட்டிடம்


பகலில் வெள்ளை மாளிகை; இரவில் வண்ண மாளிகை ஒளிரும் விளக்குகளால் ஜொலிக்கும் ரிப்பன் கட்டிடம்
x

ரூ.1 கோடியே 81 லட்சம் செலவில் ஒளிரும் வண்ண விளக்குகளால் ரிப்பன் கட்டிடம் ஜொலிக்கிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் பார்வைக்கு நேற்று அர்ப்பணித்தார்.

சென்னை,

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடம் ரூ.1 கோடியே 81 லட்சம் செலவில் ஒளிரும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, ரிப்பன் மாளிகை கட்டிடத்துக்கு மேலும் மெருகூட்டும் விதமாக அதன் முகப்பு பகுதியில் 277 ஒளிரும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ரிப்பன் கட்டிடம் பகலில் வெள்ளை மாளிகையாகவும், இரவில் வண்ண மாளிகையாகவும் பொது மக்களை கவரும் வகையில் ஜொலிக்கிறது.

இதனை மக்களின் பார்வைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், ஆ.ராசா உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

வேடிக்கை பார்த்த எனக்கு...

நிகழ்ச்சியில் ரிப்பன் கட்டிடத்தில் ஒளிரும் வண்ண விளக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். மேலும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற கடந்த ஓராண்டில், மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த மாநகராட்சி கட்டிடம் அமைந்துள்ள ரிப்பன் கட்டிடத்தில் காலை வெள்ளை மாளிகை தோன்றினாலும், மாலையில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கக்கூடிய சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளார்கள். இதனை தொடங்கி வைக்கக்கூடிய நல்ல வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியை தெரிவிக்கிறேன். இந்த மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் என்பது வரலாற்றுக்குரிய கட்டிடம்.

நான் பள்ளிக்கூடத்தில் மாணவனாக படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளியில் இருந்து கல்வி சுற்றுலா அழைத்து செல்வார்கள். சென்னையில் அடையாறு ஆலமரம், மியூசியம், உயிரியல் பூங்கா, காந்தி மண்டபம், ரிப்பன் கட்டிடம், விக்டோரியா மஹால் இதுபோன்ற கட்டிடங்களை பார்க்க முடியும். அப்போது வேடிக்கை பார்த்தேன். வேடிக்கை பார்த்த எனக்கு இன்று இந்த கட்டிடத்தில் விளக்கு எரியவைக்கக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பெருமைப்படுகிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்

1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த போது, கலைஞரிடத்தில் கட்சி முன்னோடிகள் அத்தனை பேரும், அமைச்சரவையில் மு.க.ஸ்டாலினுக்கு இடம் கொடுக்கவேண்டும் என்று போராடினார்கள். ஆனால் தலைவர் வாய்ப்பு வழங்கவில்லை. ஆட்சி அமைந்து, அமைச்சரவை அமைக்கப்பட்ட பிறகு, நீண்ட ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மாநகராட்சி தேர்தலை நடத்தினோம். அப்படி நடத்திய போது, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய முதல் மேயராக நான் வரவேண்டும் என்று மேயர் வேட்பாளராக என்னை அறிவித்தார். அப்போது வெற்றியும் பெற்றோம்.

வெற்றி பெற்ற பிறகு, மாநகராட்சியில் பதவி ஏற்பதற்கான நாள் குறிக்கப்பட்டு, மன்றத்தில் பதவி ஏற்கக்கூடிய விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான அழைப்பிதழை தலைவர் கலைஞரிடம் கொடுத்தோம். அழைப்பிதழின் பின்புறத்தில் ரிப்பன் கட்டிடம் இடம்பெற்றிருந்தது. அதனை கலைஞர் ஒரு முறைக்கு, இரண்டு முறை பார்த்தார். அப்போது அருகில் இருந்த மூத்த முன்னோடிகள், அமைச்சர்களிடம் எல்லோரும் ஸ்டாலினை அமைச்சராக்கி ஒரு அறையில் கொண்டு போய் உட்கார வைக்க பார்த்தீர்கள். ஆனால் இப்போது மேயராக்கி, இவ்வளவு பெரிய கட்டிடத்தில் உட்கார வைத்திருக்கிறேன் என்று பெருமையாக சொன்னார். அதுதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது. அடிக்கடி இந்த வழியாக செல்லும்போது அதைதான் நினைத்து கொண்டிருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமும் ஒளிரும்

இந்த வண்ண ஒளிரும் விளக்குகள் குடியரசு, சுதந்திர தினத்தன்று மூவர்ண விளக்குகளாலும், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தன்று இளஞ்சிவப்பு நிறத்திலும், தண்டுவட மரப்பு நோய் விழிப்புணர்வு தினத்தன்று ஆரஞ்சு நிறத்திலும், உலக மனநலிவு நோய் விழிப்புணர்வு தினத்தன்று நீல நிறத்திலும் மிளிரச்செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு மாதம் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளில் பசுமை, தூய்மையை வலியுறுத்தும் விதமாகவும், மாநகரை தூய்மையாக பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வெள்ளை நிறத்தில் ரிப்பன் கட்டிடத்தை ஒளிரச்செய்ய முடிவு செய்திருக்கின்றனர். அந்தவகையில் ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் சற்று கூடுதல் நேரத்திலும் விளக்குகளை ஒளிர வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story