50 ஆயிரம் பேர் மொழித்தேர்வை எழுதாமல் போனது ஏன்?


50 ஆயிரம் பேர் மொழித்தேர்வை எழுதாமல் போனது ஏன்?
x
தினத்தந்தி 18 March 2023 7:30 PM GMT (Updated: 18 March 2023 7:30 PM GMT)

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் மொழித்தேர்வை எழுதாமல் போனது ஏன்? என்பது குறித்து மாணவ-மாணவிகள் பேட்டி அளித்துள்ளனர்.

தென்காசி

'ஆப்சென்ட்' விவகாரம் கல்வி ஒன்றே மனிதனின் சொத்து, கல்வி என்பது ஒரு ஆயுதம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் கல்வி விஷயத்தில் தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளில் நடந்த தமிழ் தாள் தேர்வில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் 'ஆப்சென்ட்' ஆன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர். அவர்களில் மொழித்தாள் தேர்வை பள்ளி மாணவர்களாக 49 ஆயிரத்து 559 பேரும், தனித்தேர்வர்களாக 1,115 பேரும் என மொத்தம் 50 ஆயிரத்து 674 பேர் எழுதாமல் இருந்தது, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களில் அம்பலம் ஆகியது. இதில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி ஆலோசனை

வழக்கமாக 2 சதவீதம் 3 சதவீதம் வரையில் தேர்வர்கள் 'ஆப்சென்ட்' ஆவார்கள். ஆனால் இந்த முறை வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகமாக, அதாவது, இதுவரை இல்லாத வகையில் அதிகமான மாணவ-மாணவிகள் இந்த ஆண்டில் தேர்வை எழுதாமல் இருந்திருக்கின்றனர். இது கல்வித்துறையை மட்டுமல்லாது, கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் உள்பட அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

இந்த விஷயத்தை உடனடியாக கையில் எடுத்த பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும் சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியது. இதில் மாணவ-மாணவிகள் தேர்வை எழுத வராததற்கான காரணங்கள் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் கேட்டனர்.

காரணம் என்ன?

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, இனி வர இருக்கக்கூடிய தேர்வுகளிலாவது பெரிய அளவில் 'ஆப்சென்ட்' இல்லாமல் மாணவ-மாணவிகளை தேர்வு எழுத வைப்பது, தேர்வு எழுதாமல் போனவர்களை ஜூன் மாதத்தில் நடைபெறும் துணைத்தேர்வில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக சிறப்பு வகுப்புகள் நடத்தி எழுத வைப்பது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்திருக்கின்றனர்.இப்படியிருக்கும் நிலையில், தேர்வை எழுதாத மாணவ-மாணவிகள் என்ன காரணத்துக்காக அவர்கள் வராமல் இருந்தார்கள்? என்பது பற்றி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் விவரங்களை பெற்று விசாரித்தபோது, அதில் பெரும்பாலானோர் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியை சந்தித்து, 12-ம் வகுப்பை தொடராதவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும், படிப்பில் ஆர்வம் இல்லாதது, தேர்வு பயம், குடும்ப சூழலால் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை, காதல் திருமணம், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிக்க விரும்பியது ஆகியவற்றாலும் தேர்வை எழுதாத நிலையில் உள்ளனர்.

மொத்தத்தில் கொரோனா பலருடைய இயல்பு வாழ்க்கையை மாற்றியது போல, மாணவ-மாணவிகளின் வாழ்க்கையையும் சற்று சீண்டி பார்த்திருப்பது இதன்மூலம் தெரியவருகிறது. இதுபற்றி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேர்வை எழுதாத மாணவ-மாணவிகள் சிலரை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

சாத்தியம் இல்லை

நெல்லையை சேர்ந்த அருண்:- நான் கடந்த ஆண்டு பிளஸ்-1 படித்தபோது எனக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அதனால் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுத முடியவில்லை. பிளஸ்-2 படிப்பையும் தொடர முடியவில்லை.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் என்னை அழைத்து பிளஸ்-2 படிக்குமாறு கூறினர். அப்போது பிளஸ்-1 தேர்வையும், பிளஸ்-2 தேர்வையும் சேர்த்து எழுத வேண்டும் என்று தெரிவித்தனர். அது சாத்தியம் இல்லை என்பதால் பிளஸ்-2 மட்டும் எழுதுவதாக கூறினேன். ஆனால், அதற்கு பள்ளிக்கூட நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது. எனவே அடுத்தபடியாக பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ. படிக்கலாம் என்று முடிவு செய்து உள்ளேன்.

நெல்லையை சேர்ந்த மற்றொரு மாணவர்:- கொரோனா காலத்தில் குடும்ப சூழ்நிலையால் கிடைத்த வேலைக்கு சென்றேன். அதனால் படிப்பில் ஆர்வம் குறைந்து, வேலைக்கு செல்வதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். ஆசிரியர்கள் அழைப்பு விடுத்தபோதும், இனிமேல் படித்து தேர்வில் வெற்றி பெற முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. அதனால் நான் பிளஸ்-2 தேர்வு எழுதவில்லை.

குடும்ப வறுமை

சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மாணவர்:- நான் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தேன். எனது குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை. இதனால் நான் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். எனவே நான் தேர்வு எழுத செல்லவில்லை.

தென்காசியை சேர்ந்த மாணவர்:- நான் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தேன். அரையாண்டு தேர்வில் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்தது. இதனால் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று அச்சம் ஏற்பட்டதால், தேர்வு எழுத செல்லவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story