ஐஸ்கிரீம் விலை ரூ.5 உயர்வு ஏன்? - ஆவின் நிர்வாகம் விளக்கம்


ஐஸ்கிரீம் விலை ரூ.5 உயர்வு ஏன்? - ஆவின் நிர்வாகம் விளக்கம்
x
தினத்தந்தி 3 March 2024 2:14 PM GMT (Updated: 4 March 2024 7:03 AM GMT)

ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென ரூ. 5 உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஹெல்த் மிக்ஸ், யோகர்ட், பால் பிஸ்கட், சாக்லெட், குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார், சாக்கோ பீஸ்டு, கசாட்டா, கேன்டி, பிரீமியம் என 100-க்கும் மேற்பட்ட பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.

இந்தநிலையில் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென ரூ. 5 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஆவின் ஐஸ்கிரீம் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை விலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை (65 மி.லி) ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்ந்துள்ளது.. 125 மி.லி. கொண்ட ஆவின் வெண்ணிலா (பால்) விலை ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆகவும், 100 மி.லி. கொண்ட வெண்ணிலா கிளாசிக் கோன் விலை தலா ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 100 மி.லி. கொண்ட 'கிளாசிக் கோன்' சாக்லெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஐஸ்கிரீம் விலை ரூ.5 உயர்த்தப்பட்டது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்களை தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக விற்பனையை 20% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாததாகும். எதிர்வரும் கோடையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும் ஆவின் நிறுவனத்தின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story