நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
x

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை செய்தது

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

சேறும், சகதியுமான சாலை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில் அடித்தாலும் மதியத்திற்கு பிறகு மழை பெய்து வந்தது. நெல்லையில் 2 நாட்களாக லேசான சாரல் பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாலையில் மாநகர பகுதியில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.

சிறிது நேரத்தில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. தச்சநல்லூர், பாளையங்கோட்டை, டவுன், கே.டி.சி. நகர், புதிய பஸ் நிலைய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சந்திப்பு பகுதியில் பெய்த மழையால் ரெயில் நிலையம் திரும்பும் சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. அங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

வ.உ.சி. மைதானம்

மழை காரணமாக பள்ளி, கல்லூரி சென்று திரும்பிய மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 52 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. நெல்லையில் 20.4 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 17.4 மில்லி மீட்டரும், நம்பியாறு அணை பகுதியில் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று காலை வரையிலும் மழைநீர் தேங்கி கிடந்தது.


Next Story