மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாம்


மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாம்
x
தினத்தந்தி 20 July 2023 7:30 PM GMT (Updated: 20 July 2023 7:30 PM GMT)

பலாப்பழ சீசன் காரணமாக குன்னூர் மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்

பலாப்பழ சீசன் காரணமாக குன்னூர் மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள மரப்பாலம், கே.என்.ஆர். நகர், பர்லியார் ஆகிய பகுதிகளில் உள்ள காபி தோட்டம் மற்றும் வனப்பகுதியில் பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழ சீசன் காரணமாக அந்த மரங்கள் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகிறது. அவை யானைகளுக்கு பிடித்த உணவாக உள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் பலாப்பழங்களை ருசிக்க குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.

அவை பலாப்பழங்களை தேடி சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் யானை உலா வந்தது. தற்போது கூடுதலாக காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கே.என்.ஆர்.நகர் பகுதியில் முகாமிட்டு காபி தோட்டங்களில் உள்ள பலா மரங்களை தேடி செல்கின்றன.

வனத்துறையினர் அறிவுரை

இதனால் யானைகள் அடிக்கடி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து செல்கின்றன. இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். செல்போனில் புகைப்படம் எடுத்து யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதேபோல் அய்யன்கொல்லி அருகே மூலைக்கடையில் காட்டு யானை உலா வந்தது. அங்கிருந்து எருமாடு சென்ற வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு ஏலமன்னாவில் 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. அங்க தோட்டங்களில் இருந்த தென்னை, பாக்கு மற்றும் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.

போக்குவரத்து பாதிப்பு

இந்தநிலையில் நேற்று கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.3 தேயிலை தோட்டத்திற்குள் யானை புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து யானை அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிறிது தொலைவில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story