காட்டு யானை, சிறுத்தை அட்டகாசம்


காட்டு யானை, சிறுத்தை அட்டகாசம்
x
தினத்தந்தி 6 Sep 2023 12:58 PM GMT (Updated: 6 Sep 2023 1:48 PM GMT)

குடியாத்தம் அருகே காட்டு யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. மேலும் சிறுத்தை ஒன்று ஆட்டு குட்டியை தாக்கி இருக்கிறது.

வேலூர்

யானை அட்டகாசம்

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமம் வனப்பகுதியை ஒட்டியபடி ஏராளமான விவசாயிகள் விளைநிலங்களில் பயிர் செய்து வருகின்றனர். இந்த விளைநிலங்களுக்குள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் யானைகளை விரட்ட செல்லும் விவசாயிகளை அந்த யானைகள் துரத்துகின்றன. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு யானைகள் ராகவன் என்பவருடைய நிலத்தில் புகுந்து அறுவடை செய்து வைத்திருந்த நெல்மூட்டைகளை சேதப்படுத்தியதுடன், அருகில் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர்கள், வாழை மரங்கள், வேர்க்கடலை, தக்காளி பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.

சிறுத்தை தாக்கியது

அதேபோல் மேல்அனுப்பு கிராமத்தில் ஆனந்தன் என்பவர் தனது கன்று குட்டியை நிலத்தில் கட்டியிருந்தார். அந்த கன்று குட்டியை சிறுத்தை தாக்கியுள்ளது. இதில் கன்றுக்குட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கன்றுகுட்டியை கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

யானைகளால் சேதம் அடையும் பயிர்களுக்கு வனத்துறையினர் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் நிரந்தரமாக விளைநிலங்களுக்குள் புகாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story