கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள்


கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x

கூடலூரில் கோவிலை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் கோவிலை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

காட்டு யானைகள்

கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கோக்கால் மலையடிவாரத்தில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு இருந்தன. தொடர்ந்து மேல் கூடலூர், லாரஸ்டன், 4-ம் நெம்பர், கெவிப்பாரா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி வந்தன.மேலும் தோட்ட தொழிலாளர்களும் காட்டு யானைகள் நடமாட்டத்தால் அச்சமடைந்தனர். இதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாலை அல்லது இரவில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

கோவில் சேதம்

இந்தநிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27-வது மைல் பகுதியில் காட்டு யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முகாமிட்டன. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சனி பகவான் கோவிலை சேதப்படுத்தின. இதில் இரும்பு கதவு மற்றும் உள்ளே இருந்த பூஜை பொருட்களை காட்டு யானைகள் நாசம் செய்தன. தொடர்ந்து அதிகாலை 3 மணி வரை காட்டு யானைகள் அப்பகுதியில் நின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து பல மீட்டர் தூரத்தில் வாகனங்களை நிறுத்தினர். பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து சென்றதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.


Next Story